தஞ்சாவூர், ஜூலை 8 –
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகைமண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி 19 ஆவது வார்டில் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கே கொண்டு வந்து கொட்டி வைப்பதும், தரம் பிரிப்பதும் வழக்கம். இந்நிலையில் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மல மல பரவியது. குப்பைகளில் புகை மண்டலத்தோடு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
இதையடுத்து செக்கடி, மேல அலங்கம், மேல வீதி வடக்கு அலங்கம், கொடிமரத்து மூலை, கீழவாசல் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளானார்கள். செக்கடி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர். மேலும் ஜெப மாலைபுரம் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மேலும் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனால் காற்று அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்த அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் தீ விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? எனவும் அருகில் வசிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏதும் மேற்பட்டு உள்ளதா? எனவும் கேட்டறிந்தனர். கடந்த 17ஆம் தேதி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திடீரென மறுபடியும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இருமுறை தீ விபத்து ஏற்பட்டதால் ஏதேனும் சதியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்ததும் முரசொலி எம்பி நேரில் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் பொறுப்பு டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உடன் இருந்தனர்.



