தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆர்.ஆர். தனியார் மருத்துவமனையில் காலாவதியான நூற்றுக்கணக்கான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் சோபர்நாயகி தம்பதியினரின் குழந்தை சன்விக்கா (வயது 1 1/2) உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக ஆர்.ஆர். மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வழங்கப்பட்ட மருந்தின் காலாவதி தேதி முடிந்திருப்பதை பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட மருந்தியல் ஆய்வாளர் கோகிலா மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவமனை முழுவதும் சோதனை செய்ததில் நூற்றுக்கணக்கான காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தூர் பகுதியில் நீண்ட நாட்களாகவே காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத்துறையும் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக சிறப்பு குழு அமைத்து தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து குழந்தைகளின் மற்றும் நோயாளிகளின் உயிரை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.



