கிருஷ்ணகிரி, செப்.07.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மனும், நல்லாசிரியருமான ஆர். தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு குறித்து அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் தொழிலதிபர் மாலதி தர்மலிங்கம், ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி செயலாளர் அருள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில் “திரைப்படப் பாடல்கள் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் வழிகாட்டுகின்றன” என்ற தலைப்பில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது கருத்துகளை நகைச்சுவையுடன் எடுத்துரைத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழா, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



