நாகர்கோவில், ஜூன் 25 –
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை வேணாடு அரசரான ஸ்ரீ வீரவிமர்மர் காலத்தில் மண்கோட்டையாக கட்டப்பட்டு பின்னர் மார்த்தாண்டவர்மர் காலத்தில் கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. உதயகிரிக்கோட்டையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவாக செயல்பட்டு வருகிறது.
உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோட்டையை குமரி கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார். பல்லுயிர் பூங்காவினை புதுப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தளத்தினை புனரமைத்து, சுற்றுலா பயணிகள் வந்த இரசிக்க கூடிய நல்ல சூழலை உருவாக்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆகவே உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பல்லுயிர் பூங்கா மேம்படுத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பூங்காவில் உள்ள அரிய வகை தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள இரணியல் அரண்மனை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிருவாகத்தின் கீழ் அமைந்தள்ளது. இந்த அரண்மனை இயற்கை மற்றும் காலத்தினால் மிகவும் சிதலமடைந்த நிலையில் அதனை தொன்மை மாறாமல் புனரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.4.85 கோடி மதிப்பில் புதுப்பித்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வில் இணை ஆணையர் இந்து சமய அறநிலை துறை ஜான்சி ராணி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



