ஈரோடு, செப்.14:
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மும்முக செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.
கடந்த 13-ம் தேதி யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு விமானம் மற்றும் பரிவார மூலாலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மும்முக செல்வ விநாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் கபாலீஸ்வரர் தலைமையிலும், அகில தாந்திரி பிரசார சபா சேர்மன் பள்ளிபாளையம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கதர், ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் சுரேந்தர், அறங்காவலர் குழுத் தலைவர் கர்சிப் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் சுந்தர்ராஜ், ராவணன், ஹரிகரன், ராணி, அரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் அக்கிம், துணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முருகேஷ், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், நகைக்கடை ராஜா, பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் மாதேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.



