ஈரோடு, ஜூன் 21 –
ரெயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாட்சா மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ணவ்க்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற ரெயில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை பொது மக்கள் நலன் கருதி மீண்டும் விட வேண்டும் .
கோவை முதல் சேலம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரெயிலை விட வேண்டும். கொடுமுடி ரயில் நிலையத்தில் முன்பு நான்கு ரயில்கள் நின்று சென்றது. இந்த ரெயில்கள் மீண்டும் அங்கு நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடை மேடை அமைக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து புனே வரை இயக்கப்படும் ரெயிலை மும்பை வரை நீடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30ம் தேதி ஈரோடு ரெயில் நிலையம் அருகே சங்கு ஊதும் போராட்டம் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் தலைமையில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.