ஈரோடு, ஜூலை 14 –
ஈரோடு மத்திய பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சோதனையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கியவர்கள், ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இன்றி வந்தவர்கள் உள்ளிட்டோரிடம் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.



