சென்னை, ஜூலை 8 –
இந்தியாவில் பிற உலக நாடுகளை விட வங்கிக் கணக்கு மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக வங்கித் துறையின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மோசடி நடைபெறும் வேகம் குறித்த கவலை மீதான கருத்தாய்வில் 25 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் நடைபெறும் நிதி மோசடிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலை குறித்து உலகெங்கிலும் உள்ள நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. பாரம்பரிய மோசடி தடுப்பு முறைகளின் செயல்திறனை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடைபெறும் வங்கி செயல்பாடுகள் குறைக்கும் என 60% பேர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து “பயோகேட்ச் ” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காடி மேசோர் பேசுகையில், “வாடிக்கையாளர்கள் மின்-வர்த்தக தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு மாற்றத் தொடங்கியுள்ளது. மோசடிகள் மற்றும் பிற நிதிக் குற்றங்களை குற்றவாளிகள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் ஏஐ மற்றும் டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து வேகமாகவும், தானியக்க செயல்பாடாகவும் மாறி வருவதால், வழக்கமான அடையாள சரிபார்ப்புகளைத் தாண்டி, வாடிக்கையாளர்களின் நடத்தை, நோக்கம் மற்றும் நம்பிக்கையை உடனடியாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளும் முறைக்கு நாம் நகர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு கருவிகள் பரிவர்த்தனைகளை பொதுவாக தொடங்கும் எதிர்காலத்தில், ஏஐ உதவியுடன் செய்யப்படும் உண்மையான செயல்பாடுகளுக்கும், தீங்கிழைக்கும் ஏஐ செயல்பாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் என்று 72% பேர் நம்புகின்றனர். இந்திய நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மோசடி தடுப்பு மற்றும் இடர்வாய்ப்பு-இணக்க நிலை துறை தலைவர்களிடம் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக 90% இந்திய வங்கித் துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


