தஞ்சாவூர், ஏப்ரல் 13 –
இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சியடையும் மத்திய அரசை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? என பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டி யிடும் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தஞ்சாவூர் ரெயிலடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.சேகர் (ஒரத்தநாடு), கோவி இளங்கோ (பேராவூரணி), சண்முகபிரபு (பாபநாசம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூர்) ஆகியோருக்கு இரட்டைஇலை சின்னத்திலும், திருவையாறு தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வேலு கார்த்திகேயனுக்கு குக்கர் சின்னத்திலும், தஞ்சை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், கும்பகோணம் தொகுதி த.மா.கா வேட்பாளர் அசோக்குமார் ஆகியோருக்கு தாமரை சின்னத்திலும் வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தஞ்சாவூர் என்றால் பொன் விளையும் பூமி. இந்த பூமியை மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க புத்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அப்படி உங்கள் நிலத்தை அபகரித்தவரின் ஆட்சி தொடர வேண்டுமா? நான் ஒரு விவசாயி, இன்றும் விவசாயம் செய்கின்றேன். நம் பூமியை மு.க.ஸ்டாலின் அபகரித்து பல்வேறு தொழில்களுக்கு கொடுக்க முயற்சித்தார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது காவேரி பிரச்சனைக்கு கோர்ட்டுக்கு சென்றது. அதை தொடர்ந்து அவருக்கு பின்னர் ஜெயலலிதா, நியாயத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜெயலலிதா இருக்கிற போதே நாம் தீர்ப்பை பெற்றோம்.
ஆனால் திமுக மத்திய ஆட்சியில் இருந்தபோது இதில் கவனம் செலுத்தவில்லை. ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை நாம் தொடர்ந்து நடத்தி விவசாயிகள் வயிற்றில் பால் பார்க்கும் வகையில் தீர்ப்பு பெற்றோம். விவசாயிகள் கனவை நினைவாக்கியது அதிமுக அரசு. நமக்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றோம். அப்போது அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணி இருந்ததும் அந்த தீர்ப்பை அமல்படுத்த தாமதம் ஆனது. இதனால் விவசாயிகள் கோரிக்கையின் பேரில் அதிமுகவைச் சேர்ந்த 37 எம்.பி.கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றக்கோரி நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்தி வைத்தோம்.
திமுக அப்படி செய்ததா? நீட்டுக்காக அப்படி குரல் கொடுத்தார்களா? பா.ஜனதா அரசு துரோகம் செய்கிறது என்கிறார் மு.க.ஸ்டாலின். அந்த கட்சியோடு தான் நீங்கள் 1999, 2001 தேர்தல்களில் கூட்டணி வைத்து மத்திய அரசிலும் அங்கம் வகித்தீர்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, நாம் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? இதுதான் சந்தர்ப்பவாத அரசியல். அ.தி.மு.க வாக்குகள் சிதறாமல், மக்கள் விரோத ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்தோம். ஒத்த கருத்துடன் நாங்கள் இருக்கிறோம். இது இயற்கையான கூட்டணி.
15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி இருந்த நீங்கள் (திமுக) என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள்? காவிரி பிரச்சனையை தீர்த்தீர்களா? விவசாயிகளின் நிலத்தை காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. நீண்ட நாள் காவிரி பிரச்சனைக்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது அ.தி.மு.க அரசு. பா.ஜனதா அரசு வஞ்சிப்பதாக சொல்கிறார் மு க ஸ்டாலின். நீங்கள் 15 ஆண்டு காலம் பல்வேறு மத்திய அரசின் பங்கு வகித்தீர்கள்? தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீதி கொண்டு வந்தீர்கள்? குடும்பத்தில் இருப்பார்கள் இடம் பெற வேண்டும். வளம் பெற வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம்.
அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது கூட நிதி பெற்றுக் கொடுக்கவில்லை. இப்போது திட்டமிட்டு பாஜனதாவை விமர்சிக்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சியடையும். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றியது. நெடுஞ்சாலை, விமான நிலையம், ரயில் பாதை எல்லாம் கொடுத்தார்கள். புதிய ரயில்கள் கொடுத்தனர். இப்போது இணக்கமான சூழல் இல்லை.
எப்போது பார்த்தாலும் பாஜனதாவை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? பா.ஜனதா, திமுக வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள். தேர்தல் நடக்கும் வரை வேறுபாடு இருக்கலாம். தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்கு நன்மை செய்வது கட்சியின் கடமை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
இந்த 5 ஆண்டு காலம் பல்வேறு பலன்கள் கிடைக்காமல் போனது. மத்திய அரசை குறை சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டனர். கருப்பு பலூன் விட்ட மு.க.ஸ்டாலின். இப்போது மோடிக்கு வெள்ளை குடை பிடிக்கிறார். ஆளுகின்ற போது ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலை என்று இரட்டை வேடம் போடுகிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டதும் உடனுக்குடன் நிவாரணம் கொடுத்தோம். அ.தி.மு.க ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்ற ஆண்டு மழையில் நெற்பயிர்கள் அழுகிப்போனது. அதை நேரில் வந்து மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை.
இன்று தேர்தலில் ஓட்டு தேவை என்பதால் ஓடோடி வருகிறார். அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்தோம். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பயிர் கடன் ரத்து செய்யப்படும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.



