நாகர்கோவில், ஜூன் 25 –
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கால அளவு நான்கு மாதங்கள் ஆகும்.பயிற்சி பெறும் காலங்களில் இளைஞர்களுக்கு உதவித் தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்புக்கான வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.18000/- முதல் ரூ.22,000/- வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



