தக்கலை, செப். 24 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில்
தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில்
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில்
நேற்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் வைத்து, பத்மனாபபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட்டம் நடைப்பெற்றது.
இதில் ஆட்டோக்களில் அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும். இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் முடியும். ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிந்து அதில் பெயர் அட்டை (பேட்ஜ்) அணிந்திருக்க வேண்டும். இது ஓட்டுனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் உதவுகிறது.
ஆட்டோ ஓட்டுனர், பணி நேரத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றக்கூடாது. பள்ளி குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக்களை ஆட்டோவின் வெளியே தொங்க விடக்கூடாது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமுள்ளது. சாலையில் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கினால் ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் இறங்க வேண்டும். இவ்வாறு மனிதநேய பணியில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையும் பாராட்டுகிறது என காவல்துறை சார்பில் அறிவுரை கூறப்பட்ட இக்கூட்டத்தில், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு, பத்மனாபபுரம், குமாரக்கோவில், முளகுமூடு, மேக்காய்மண்டபம், வேர்கிளம்பி உட்பட பல பகுதிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.



