நாகர்கோவில் கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (47) தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா சுந்தரி (47) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் இரண்டு மகள்களும் மல்லிகாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அவர்களை பார்ப்பதற்காக கடந்த இரண்டாம் தேதி மல்லிகா தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று மல்லிகா தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது
சந்தேகம் அடைந்த மல்லிகா உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள அறையில் கிறிஸ்துராஜ் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிறிஸ்துராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். கிறிஸ்துராஜ் மது பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்தார். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் மது அருந்தவில்லை யாம். திடீரென மதுவை நிறுத்தியதால் தனக்கு அதிக படபடப்பு, மன அழுத்தம் வருவதாக கிறிஸ்துராஜ் அடிக்கடி தனது குடும்பத்தினரிடம் கூறி வந்தாராம். அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென கிறிஸ்துராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.