குளச்சல், மே. 29-
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யா மகன் ரூபன் கிங்ஸ்லி (36). மீன்பிடி தொழிலாளி. அதே பகுதி அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஜான் ஜோசப் மகன் ஜான் குமார் (35). இவரும் மீன்பிடி தொழிலாளி. ரூபன் கிங்சிலிக்கும் ஜான் குமாருக்குமடைய பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கிங்ஸ்லி , ஜான் குமாரின் தாயார் குறித்து தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் குமார் தான் வைத்திருந்த கத்தியால் ரூபன் கிங்ஸ்லியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரூபன் கிங்ஸ்லி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
தொடர்ந்து ரூபன் கிங்ஸ்சிலியின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையே ஜான் குமார் மணவளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.