நீலகிரி. மார். 10.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கோத்தகிரி அருகே உள்ள சுள்ளிகூடு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ‘காலநிலை மாற்றமும் பெண்களும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை(பொறுப்பு )
திருமதி லிண்டா சுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது உரையின் போது கூறிய கருத்துக்களாவன – உலகின்
ஒட்டு மொத்த சமுதாயமே தாய் வழி சமுதாயம் தான். நவீன அறிவியல் மரபணு துறையானது இன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் 17 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சகாரா பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாரிசுகள் தான் என கண்டறிந்துள்ளது. லூசி என பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணின் எலும்புக்கூடு இன்றளவும் எத்தியோப்பியாவில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. நமது லூசி பாட்டிக்கு பிறகான காலத்தில் சுமார் 5 ஆயிரம் தலைமுறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். அதாவது நமது மரபணுவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டிகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பொருளாகும். ஆனால் நமது தாத்தாக்களின் மரபணு ஏழு தலைமுறைக்கு மேல் நம் மரபணுவில் காணப்படுவதில்லை எனவும் அறிவியல் ஆய்வு கூறுகிறது. மேலும் பிறப்பில் நாம் அனைவருமே பெண்கள் தான். தாயின் கருவில் உருவாகும் கரு ஒரு வாரம் கழித்து தான் அப்பாவின் ஒய் குரோமோசோம் பரவி ஆண் குழந்தையாக மாறுகிறது. எனவே பெண் தான் மனித குலத்தின் ஆதாரம். விவசாயம் மற்றும் நில உடமை சமுதாயம் தோன்றிய பிறகுதான் இங்கு ஆணாதிக்க சமுதாயம் தோன்றியது. அதன் பிறகு தான் பெண் ஆணுக்கு அடிமையானாள். இந்த நிலை இன்றளவும் தொடர்வது பெண்ணினத்திற்கே சாபக்கேடாகும். ஒவ்வொரு ஆணும் தாய் இல்லாமல் நாம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெண்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுக்காண்டு வெப்பம் கூடிவரும் நிலையில் தண்ணீருக்காக மிக தூரம் வரை நடக்க வேண்டிய பொறுப்பு பெண்கள் தலையில் தான் விடிகிறது. உணவு பற்றாக்குறை ஏற்படும் போது ஒரு பெண் தன் குழந்தைகளுக்காகவும் ஆண்களுக்காகவும் தனது உணவை தியாகம் செய்வாள். ஊட்டச்சத்து குறைவான குறைந்த அளவு உணவு மட்டுமே ஒரு பெண்ணுக்கு கிடைக்கும். அதனால் பெண்ணின் உடல்நலம் மட்டும் பாதிப்படையாமல் அவள் கருவில் வளரும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். வெப்பநிலை உயர்வு அவளது உடல் மற்றும் மனநிலையை பெரிதளவு பாதிக்கிறது. மனித மரபணுவை கண்டுபிடித்த விஞ்ஞானி ஒரு பெண். ஆனால் அவரது கண்டுபிடிப்பை களவாடிய ஆண்கள்தான் நோபல் பரிசு பெற்றார்கள். ஏராளமான பெண் விஞ்ஞானிகள் ஆண் விஞ்ஞானிகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். இந்த இழி நிலை மாற கல்வி ஒன்று தான் பெண்களுக்கு கை கொடுக்கும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் கூறினார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார். ஆசிரியை மலர்மணி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.