நாகர்கோவில், ஜூலை.6
குமரி மாவட்டம் நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி சுசிலா (வயது 67). இவர் நேற்று காலை திங்கள் சந்தையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்ல செட்டிக்குளத்தில் இருந்து திங்கள் சந்தை செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்தப் பேருந்து டெரிக் சந்திப்பு கடந்து ஆசாரி பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் இருந்த பெண்கள் சுசிலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தார். இதை பக்கத்தில் இருந்த பெண் பார்த்து சுசிலாவிடம் கூறினார். அப்போது பஸ் கன்கார்டியா பஸ் நிறுத்தத்தில் நின்றது. நகையை பறித்த பெண்கள் பஸ்சை விட்டு இறங்கி தப்பி ஓடினர்.
சுசிலாவும் பஸ்சை விட்டு இறங்கி கூச்சலிட்டார். அப்போது பெண்கள் தனித்தனியாக வேறு வேறு திசையில் தப்பி ஓடினர். ஒருவர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் லிப்ட் கேட்டு தப்பி செல்ல முயன்றார். உஷாரான ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது மூதாட்டியிடம் நகை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து வைத்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த இசக்கியம்மாள் என்பது தெரியவந்தது.
அவருடன் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை பிடிக்க நாகர்கோவில் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தை அடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.