களியக்காவிளை, நவ. 20-
சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் மகா பாத யாத்திரைக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்யா வைகுண்டரை கையில் விலங்கிட்டு சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்று, கொடுமைப்படுத்திய சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பாதயாத்திரை சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த பாதயாத்திரைக்கு நேற்று களியக்காவிளையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் விளவங்கோடு வட்டார தலைவர் மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். களியக்காவிளை ஓய்.எம்.சி.ஏ அமைப்பின் நிர்வாகி கிங்ஸ்லி வரவேற்றார்.வரவேற்பு நிகழ்ச்சியை பாறசாலை தொகுதி எம்எல்ஏ ஹரீந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகி ஜாண்ரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், மாநில வர்த்தக அணி தலைவர் ஜோஸ் பிரபு, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான் ஆகியோர் பேசினர். மாநில மத நல்லிணக்க இயக்க துணைச் செயலர் ஹலீல் ரகுமான், மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய திமுக துணைச் செயலர் தோமஸ் சிங் உள்பட பலர் பங்கேற்றனர். திமுக நிர்வாகி ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.