நாகர்கோவில். ஜன. 24-
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட சிபிஎம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்து பேசியதாவது: இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த வேண்டுமென மிரட்டுகிறது.
இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்கும் அளவை குறைத்துக்கொண்டு வருகிறது. இருப்பினும் அமெரிக்க அரசு இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதித்து வருகிறது.
அண்மையில் ரஷ்யாவில் இருந்து கச்ச எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழி வகுக்கும் ரஷ்ய தடைகள் மசோதாவை டிரம்பபின் குடியரசுகட்சி உறுப்பினர் மூலம் அறிமுகம் செய்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா எனது விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். என்னை மகிழ்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும் என டிரம்ப் இந்தியாவை நேரடியாக மிரட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அத்துமீறல் குறித்தும், அடாவடத்தனம் குறித்தும் இந்தியா இதுவரை வாய் திறந்து பேசாமல், அமைதி காத்து வருவது, நமது அயலுறவுக் கொள்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.நாட்டின் இறையான்மையையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் பாதுகாக்க வேண்டி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., நூர் முகம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாத்துரை, என்.எஸ்.கண்ணன், கே.தங்கமோகனன், என்.ரெஜீஸ்குமார், எஸ்.அந்தோணி, ஆர்.ரவி, நார்கோவில் மாநகர செயலாளர் எஸ்.அருணாசலம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசைன் முடித்து வைத்து பேசினார்.



