ஆரல்வாய்மொழி பிப் 24
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்நாள் நமக்கெல்லாம் பொன்நாள்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் புரட்சித்தலைவி அம்மா கூறிய கருத்துக்கிணங்க அ.இ.அ.தி.மு.க நூறாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றும் என்பதை மெய்யாக்கும் வகையில் கழகம் ஒற்றுமையாக தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற கழகப் பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமியின் மேலான தலைமையில் நாம் தொடர்ந்து பயணிப்போம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்திகளை அழித்து நீதியை நிலை நாட்ட புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட உன்னதமான மக்களின் பேரியக்கமாகும். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவரைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்து ஆல்போல் தழைக்கச் செய்து எக்கு கோட்டையாக பாதுகாத்தவர். அம்மாவை தொடர்ந்து அவர்கள் வழியில், அதிக உறுப்பினர்களை சேர்த்து தொண்டர்களின் பேரியக்கமாக மாற்றிய பெருமை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உண்டு. கழக வளர்ச்சியை அதிகரிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு இன்று இளைஞர், இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் விளையாட்டு துறையில் புதிய அணி உருவாக்க நடவடிக்கைள் மற்றும் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அ.இ.அ.தி.மு.க அலுவலகம் போன்றவற்றை அம்மாவின் விருப்பப்படியே புரட்சித்தமிழர் எடப்பாடியார் உருவாக்கி பெருமை சேர்த்துள்ளார். அரசியல் நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூட பூத்கமிட்டிகளை உருவாக்கியதற்கு அடிப்படையாக விளங்கியவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார்.
புரட்சித்தலைவி முதலமைச்சராக இருந்த போது பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, பெண்களின் நலனை பாதுகாக்க எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார்கள். பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக காவல் துறையினை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக உருவாக்கினார்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொட்டில் குழந்தை திட்டத்தினை நிறைவேற்றினார்கள். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணிணி, பாடப்புத்தகம், புத்தக பைகள் போன்ற திட்டங்களையும், தாலிக்குத் தங்கம், அன்னதானத் திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு அற்புதமான திட்டங்களையும் நிறைவேற்றினார்.
தற்போது தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை, வேங்கைவயல் பிரச்சினை, அண்ணா பல்கலை கழகத்தில் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பின்னை இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும். இதற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருந்து கடினமாக உழைத்து வெற்றி இலக்கை அடைய வேண்டும் என புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்த நாள் விழா நடைபெறும் இந்நாளில் சபதம் ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.