திருத்துறைப்பூண்டி, டிசம்பர் 10 –
டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால்
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் சுமார் 5000 ஏக்கர் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருந்து வருகிறது. பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து ஹெக்டர் ஒன்றுக்கு
இருபதாயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பயிர் பாதிப்புகளை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து, இம்மாதம் 12ம் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேளாண்துறை அமைச்சர் அறிவுத்தியிருந்தார்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்ட வேளாண் அலுவலர்களை கொண்டு விரைவாக கணக்கெடுக்க
உத்தரவிட்டிருந்தார்.
நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டதிலிருந்து டிஜிட்டல் முறையை பின்பற்றி கணக்கெடுக்க
அரசியல் கட்சியினர், வேளாண்துறையினர் மற்றும் விஏஓக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் டிசிஎஸ் செயலியிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை.
இன்று திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி வருவாய் சரகத்திற்குட்பட்ட அம்மனூர், ஆலத்தம்பாடி, ஆண்டாங்கரை, ஆதனூர், கோமல் உள்ளிட்ட கிராமங்களில் டிஜிட்டல் முறையில்
பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க சென்ற வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் விரட்டியடித்தனர். இதனால் கணக்கெடுக்கும் பணியினை கைவிட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவும், டிசிஎஸ் முறையை கைவிடவும் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.



