குமரிமாவட்ட கடலோர கிராமங்களை 1979 வரை இருந்ததுபோன்று பஞ்சாயத்து ராஜ் சட்ட விதிமுறைகளின்படி தனித்தனி கிராம பஞ்சாயத்துகளாக மறுவரையறை செய்து வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அரசும் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையும் ஆணை வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசுக்கும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது…
கன்னியாகுமரி மாவட்டம் தற்போதைய நிலையில் 48 கடற்கரை கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. கிழக்கே திருநெல்வேலி மாவட்ட கடலோர எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கே கேரள மாநிலத்தின் எல்லையான நீரோடி வரையான கடற்கரை கிராமங்கள் உள்ளன. சுமார் 72 கி.மீ நீளமுள்ள கடற்கரை கிராமங்களில் மூன்று லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இதில் சுமார் இரண்டரை லட்சம் மீனவ வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக 1980 ம் ஆண்டு பஞ்சாயத்து மறுசீரமைப்பு நடந்தது. இந்திய நாடு சுதந்திரமடைந்த போது குமரிமாவட்டத்தில் 35 கடற்கரை கிராமங்கள் இருந்தன. அதில் 23 கிராம பஞ்சாயத்துகள் இருந்தது. குறும்பனை என்ற ஒரே கிராமம் விளவங்கோடு தாலுகா, கல்குளம் தாலுகா என்ற இரண்டு தாலுகாவில்இருந்ததால் கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி குறும்பனை ஊராட்சி என்றும் விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி மேலக்குறும்பனை ஊராட்சி என்றும் இருந்தது. குளச்சல் நகராட்சியில் குளச்சல், மரமடி, கொட்டில்பாடு தவிர மற்ற கிராமங்கள் அனைத்தும் கிராம பஞ்சாயத்துகளாக இருந்தன.
1980 ம் ஆண்டு பஞ்சாயத்து மறுசீரமைப்பின்போது வெறும் 8 கிராம பஞ்சாயத்துகளை வைத்துவிட்டு மற்றெல்லா கடற்கரை கிராமங்களை வேறு பகுதிகளில் இருந்த பேரூராட்சிகளோடு சேர்க்கப்பட்டுவிட்டது. அதுவரை 23 பஞ்சாயத்து தலைவர்களை உருவாக்கித் தந்த கடற்கரை சமூகம் 8 தலைவர்களாகச் சுருங்கிவிட்டது. மற்ற தலைவர்களெல்லாம் வெறும் வார்டு உறுப்பினர்களாகச் சுருங்கிப்போயினர். கடலோரத் தலைமைகளை திட்டமிட்டு சிதைக்க மேற்கொள்ளப்பட்ட சதியாகவே கடலோரச் சமூக மக்கள் இதைப் பார்க்கிறார்கள்.
இரண்டு கிராம பஞ்சாயத்தாக இருந்து இரண்டு ஊராட்சிமன்ற தலைவர்களைத் தந்துகொண்டிருந்த குறும்பனை கிராமம் வெட்டி சிதைக்கப்பட்டு ஒருபகுதி பாலப்பள்ளம் பேரூராட்சியுடனும் ஒருபகுதி ரீத்தாபுரம் பேரூராட்சியுடனும் எஞ்சிய பகுதி சைமன்காலனி ஊராட்சியுடனும் இரண்டு தலைவர்கள் மூன்று வார்டு மெம்பர்களாக தரம்தாழ்த்தப்பட்டனர்.
இந்நிலையை எதிர்த்து 1980- ம் ஆண்டுமுதல் கடலோர கிராம மக்கள் போராடி வருகின்றனர். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஒவ்வொரு கடற்கரை கிராமங்களையும் தனித்தனி கிராம பஞ்சாயத்துகளாக மறுசீரமைப்பு செய்யக் கேட்டு பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம், மறியல், தேர்தல் புறக்கணிப்பு என்று அத்தனை ஜனநாயக வழிமுறைகளிலும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
2024- ம் ஆண்டு பஞ்சாயத்து மறுசீரமைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கடற்கரை கிராமங்களில் 37 கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு உட்பட்டு எந்தெந்த கடற்கரை கிராமங்களை தனி ஊராட்சியாக மாற்றமுடியும் என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அரசு கேட்டது. ஆனால் அதிகாரிகளோ ஒரு கிராமத்தைத் தனி ஊராட்சியாக மாற்றவேண்டுமானால் 10000 வாக்காளர்களுக்குமேல் இருக்கவேண்டும்; ஆண்டிற்கு 30 லட்சம் வருவாய் இருக்கவேண்டும்; பஞ்சாயத்து பகுதிகளுக்குள் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த கடற்கரை புறம்போக்கு நிலங்கள் இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள்.
தமிழ்நாட்டில் 500 வாக்காளர்கள் உள்ள 66 ஊராட்சிகள் உள்ளன. 1000 வாக்காளர்கள் கொண்ட ஊராட்சிகள் 1177 உள்ளன. ஆண்டிற்கு 50000 -க்கும் குறைவான வருவாய் உள்ள 10 ஊராட்சிகள் உள்ளன. 50000 முதல் 100000 லட்சம்வரை வருமானம் உள்ள 178 ஊராட்சிகள் உள்ளன. என்ற புள்ளிவிபரங்களை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
குமரிமாவட்டத்தின் எந்த கடற்கரை கிராமத்திலும் ஒரு துண்டு புறம்போக்கு நிலம்கூட கிடையாது. ஆனால் அரசு உள்கட்டமைப்புக்காக நிலம் கேட்கும்போது அதை அந்த கிராம மக்கள் வாங்கி அரசுக்கு எழுதிக்கொடுப்பார்கள் என்ற நடைமுறைகளையும் எடுத்துக்கூறி இனியும் தாமதம் செய்யாமல் குமரிமாவட்டத்தின் ஒவ்வொரு கடற்கரை கிராமத்தையும் தனித்தனி கிராம பஞ்சாயத்துகளாக சீரமைத்து ஆணை வழங்கவேண்டியது அரசு மற்றும் ஊரக உள்ளாட்சித்துறைக்கு அவசர அவசிய தேவையாகும் என்ற கோரிக்கையை நெய்தல் மக்கள் இயக்கம் முன்வைக்கிறது என்று குறும்பனை பெர்லின் தனது மனுவில் கூறியுள்ளார்.



