தக்கலை, ஏப்- 30
வில்லுக்குறி அருகே மாடதட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்திற்கு சொந்தமான புனித மிக்கேல் அதிதூதர் குருசடி மாடத்தட்டுவிளை வலிய கண்டறையில் உள்ளது. இங்கு காலை மாலை அப்பகுதி மக்கள் வந்து ஜெபம் செய்து செல்வது வழக்கம். நேற்று காலையும் அப்பகுதி மக்கள் ஜெபம் செய்ய குருசடி வந்தனர்.
அப்போது குருசடியின் கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் பதறிப்போன மக்கள் என்னவென்று பார்த்தனர். புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத்தில் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த தங்க பொட்டும், கால்களில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி கொலுசுகளும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் ஆலய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆலய நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.