மார்த்தாண்டம், மார்- 1
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இலவுவிளை பகுதியை சேர்ந்த சுதா (28) என்பவர் தனது சகோதரியின் 2 வயது குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அங்கு நின்ற ஒரு பெண் குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலை திருடி உள்ளார். அப்போது குழந்தை கத்தியவுடன் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மீண்டும் அதே பஸ் நிலையத்தில் பஸ் ஏற வந்திருந்த ஒரு பெண் கத்தி கூச்சலிட்டார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரித்த போது மூன்று பெண்கள் ஒரே யூனிஃபார்மில் டிப்டாப் சேலை உடுத்தி இருந்ததாகவும் அவர்கள் தன்னிடம் நெருக்கமாக உரசி நின்றதாக கூறியுள்ளார். எனவே கழுத்தில் கடந்த தாலி செயினை பிடித்தபடி நின்று உள்ளார். ஆனால் அந்த பெண்கள் அந்தப் பெண்ணின் பையில் இருந்து ரூபாய் 10 ஆயிரம், அவரது பர்ஸ், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றுடன் மாயமானது தெரிந்தது.
இதை போலீசார் விசாரித்து கொண்டு இருந்த நிலையில் மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் மற்றொரு பகுதியில் அந்த திருட்டு பெண்களுடன் வந்த மர்ம ஆசாமி ஒருவர் பார்வை குறைபாடு உள்ள ஒரு முதியவரை பஸ்ஸில் ஏற்றுவது போல் நடித்து, அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துள்ளார். உஷாரான முதியவர் கத்தி கூச்சலிட்ட உடன் அங்கிருந்த பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருட்டுப் பெண்களுடன் வந்து வசமாக மாட்டிக் கொண்ட ஆசாமியை மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவருடன் வந்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.