மதுரை மே 28
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில்
நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக
அரசுக்கு 18 இலட்சத்து 38 ஆயிரத்து 190 ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த 04.05.2025-அன்று தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 26 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம்பெற்றுள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரசு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 ரூபாயும், சிறியவர்களுக்கு ரூ.10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதுவரை அரசுப் பொருட்காட்சியை இதுவரை 1 இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் கண்டுகளித்துள்ளனர். இது கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் ஆகும். இந்தப் பொருட்காட்சி வருகின்ற 22.06.2025-ஆம் தேதியன்று நிறைவடைகிறது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.