தென்காசி, ஜன. 15 –
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களின் ஏற்பாட்டில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” 1008 பானை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
3000க்கும் மேற்பட்ட பெண்கள் 1008 பானைகளில் பொங்கலிட்ட இந்த விழா, பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக நடைபெற்றது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி, அக்னிபாத் பயிற்சியாளர்கள், விவசாயிகள், மருத்துவ அணிகள் உள்ளிட்டோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய திரு. அண்ணாமலை, “தென்காசி மக்களின் நீண்டகால கோரிக்கையான செண்பகவல்லி அணை சீரமைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நம்பிக்கையை திமுக அரசு வஞ்சித்து வருகிறது” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கி விவசாயிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசே. ஆனால், திமுக அரசு அடிப்படை தேவைகளைக்கூட புறக்கணிக்கிறது” என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும், இதனைத் தடுக்க திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் வெளிப்பாடாக திமுக நிர்வாகி ஒருவர் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மண்ணைச் சேர்ந்த, தேசியவாத சிந்தனை கொண்ட ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
தமிழ் பண்பாடு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.



