மார்த்தாண்டம் ஏப் 8
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்துவருகிறது. அணைகளின் நீா்ப்பிடிப்பு, சமவெளிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்நிலையில், பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி அணைப் பகுதிகள், குலசேகரம், அருமனை, கடையாலுமூடு, திருநந்திக்கரை, சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
காட்டாறுகளில் மழைநீா் பெடுக்கெடுத்ததால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு அதிக நீா்வரத்து இருந்தது.திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், வடுகிடந்த திற்பரப்பு அருவியில் தண்ணீா் விழத் தொடங்கியது. சனிக்கிழமை மாலை அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கருங்கல், பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கருமாவிளை, மிடாலம், மேல்மிடாலம், பாலூா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி பகுதிகளில் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.