சுசீந்திரம், ஜன. 3 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெரும் திருவிழாவிற்காக கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10;15 மணிக்கு விநாயகர் தேர் சுவாமி தேர் அம்பாள் தேரை வடம் தொட்டு இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை 6 மணிக்கு சுவாமி தந்த பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணியளவில் தனது தாய் தந்தைக்கு நடைபெறும் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வருகை புரிந்த கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் சுவாமி அம்பாள் கிழக்கு திசை நோக்கி நிற்க மூன்று முறை வலம் வந்து தனது தாய் தந்தையர்களை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் சென்ற சப்த வர்ண காட்சி நடைபெற்றது.
பத்தாம் திருவிழாவான இன்று காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடராஜமூர்த்திக்கு அஸ்டாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடராஜர் திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சுவாமிகளுக்கு திரு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.



