மே:30
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது,
திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கண்காணிப்புக்குழு, உயர்கல்விக்குழு போன்ற பல்வேறு குழுக்கள் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
கல்வி சார்ந்த அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்தின் வழிகாட்டும் அலுவலர்கள் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு முக்கியமான பங்களிப்பை நல்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 23,500 மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். இலக்கு பெரியதாக இருந்தாலும் அதை அடைய அனைத்து வழிகாட்டுதலையும் அனைத்து அலுவலர்களும் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்பதை தெரிவித்தால் உடனடியாக நிறைவேற்றி தருதல் வேண்டும்.
அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9,907 மாணவர்களில் இன்றைய தேதியில் 9,327 மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இதுவரை 94.11 சதவீத மாணவர்கள் உயர்கல்வி விண்ணப்பித்துள்ளார்கள். மீதமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்காத காரணங்கள் குறித்து களஆய்வு மேற்கொண்டு ஆலோசனைக்கள் வழங்க 16 மாவட்ட உயர் அலுவலர்கள் அடங்கிய உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லாமல் இருப்பதற்கு நிதிபற்றாக்குறை, குடும்பச்சூழல், உயர்கல்வி படிப்பில் ஆர்வமின்மை, தொழில் செய்தல், பெற்றோர்களின் அனுமதியின்மை மற்றும் அருகாமையில் கல்லூரியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. அதற்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி 100 சதவீதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை பெற்று உயர்கல்வி கற்க வேண்டும்.
உயர்கல்வியில் வழிகாட்டுதலுக்கான கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சாய ஆலைகள் சங்கம் மற்றும் தொழிற்சாலைகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சாலை உரிமையாளர்களுடன் இன்றைய தினம் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான வழிமுறைகள் குறித்தும், நிதியுதவி குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. தொழில் நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி செல்வதற்கு தேவையான உதவிகளையும் முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்கள்.
முன்னதாக, நீட் பயற்சி வகுப்புகள் நடைபெற்ற 5 அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ந.கீதா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணை இயக்குநர் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்)
த.பூகழேந்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் பாலச்சந்திரன், சாய ஆலைகள் சங்க செயலாளர் பூபதி, தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.