களியக்காவிளை அருகே கோழி விளையில் | இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆண்டனி தாஸ் மகன் ஜெயரூபன் (39) என்பவர் தங்கி இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ ஓட்டுனரான
ஜெயரூபன் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை மீன் மார்க்கெட் சென்றார். நள்ளிரவு வரை அங்கு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஜெயரூபன் சுருண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அந்த வழியாக சென்ற சிலர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது ஜெயரூபன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்.
இது குறித்து அவரது தங்கை தினுசியா (38) என்பவர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயரூபன் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


