நாகர்கோவில், மே 23:
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் தனித் திறன்களை மெருகேற்றும் வகையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள், மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களில் ஆன்லைன் அசஸ்மென்ட் டெஸ்ட் மற்றும் வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1500 மாணவர்களின் பெயர் பட்டியல் அனுப்பப்படுகிறது.
இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 625 மாணவிகளும், 429 மாணவிகள் காத்திருப்போர் பட்டியல் உடனும், சேலம் மாவட்டம் ஏற்காடு முகாமிற்கு 275 மாணவர்களும், காத்திருப்போர் பட்டியலில் 171 மாணவர்களுடன் சேர்த்து 1500 மாணவ மாணவியர் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது.
முகாமிற்காக தெரிவு பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களை அந்தந்த மாவட்ட பட்டியலில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நீலகிரி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவ மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற வேண்டும். மாணவிகளை அழைத்து செல்லும்போது 20 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியர், மாணவிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பின் ஒரு மாணவியின் தாயாரையும் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கலாம். மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் சேலம் மாவட்டத்திலும் நடைபெறும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.