அஞ்சுகிராமம் ஜன 9
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் அகதீஸ்வரம் வட்டம், அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்:-
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமின் நோக்கம் அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது.
அதனடிப்படையில் அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும். வீடு தொடர்பான மனுக்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இம்முகாமின் நோக்கம், அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து உரிய துறைகளுக்கு விண்ணப்பித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் பள்ளிவளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூகநலத்துறை துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ். இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மைத்துறை), மரு.இராதாகிருஷ்ணன் (கால்நடை பராமரிப்பு துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)ஜெங்கின் பிரபாகர், துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), கீதா (வேளாண் விற்பனை). மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா. அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன். அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.