நாகர்கோவில் ஜூன் 15
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் வினோத் சைமன் (வயது 72). என்ஜினியரான இவர் ஐதரா பாத்தில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி இரவு இருவரும் டெரிக் சந்திப்பு பகுதியில் உள்ள ஜெபக்கூடத்துக்கு சென்றனர். பின்னர் இரவில் உறவினர் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலையில் தங்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 17 அரை பவுன் நகை மற்றும் வைர நெக்லஸ் காணாததை கண்டு திடுக்கிட்டனர். ஆளில்லாததை நோட்டமிட்டு இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தங்க மற்றும் வைர நெக்லசை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் துப்பு துலக்க நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாங்சென் டோமா பூட்டியா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து வீட்டின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 3 மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் முகம் சரிவர தெரியவில்லை. இதை வைத்து பார்த்தபோது 3 பேர் சேர்ந்து துணிகர திருட்டில் ஈடுபட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
விசாரைைணய துரிதப்படுத்தியதில் என்ஜினீயர் வீட்டில் திருடிய ஆசாமிகள் தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் 3 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிடிபட்டவர்கள் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 49), ராமமூர்த்தி (48) மற் றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (48) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீட்டில் திருடிய நகை மற்றும் வைர நெக்லஸ் மீட்கப்பட்டது.
ஆனால் நகையானது அப்படியே கிடைக்கவில்லை. உருக்கிய நிலையில் தான் கிடைத்தது. கைதான 3 பெரும் கூட்டாகத் தான் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இவர்கள் மீது 7 திருட்டு வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் தற்போது தான் முதல் முறையாக திருட வந்துள்ளனர். முதல் முயற்சியிலேயே அவர்களுக்கு 17அரை பவுன் நகை மற்றும் வைர நெக்லஸ் கிடைத்துள்ளது நகையை அப்படியே விற்றால் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக அதை உருக்கி விற்பனை
செய்து வந்துள்ளனர். தற்போது திருடிய நகையையும் விற்பதற்காக உருக்கி வைத்திருந்தனர் என போலீஸ் தரப்பில் கூறினர்.
இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய உதவிய தொழில்நுட்ப பிரிவினர் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.