நாகர்கோவில் மே 19
குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் குளிப்பதை படம்பிடித்து, அதனை காண்பித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.குமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் அதே பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அந்த பெண்ணின் உறவினர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மதுராஜா (35). இவர் ராணுவத்தில் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் மதுராஜா ஊருக்கு வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2023ல் அந்த பெண் புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதில் பங்கேற்க சென்ற மதுராஜா குளியலறையில் ரகசிய கேமராவை பொருத்தி உள்ளார். பின்னர் அவர் மிசோரம் மாநிலத்துக்கு பணிக்கு சென்றுவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பணியில் இருந்தவாறே பெண்ணின் வீட்டு குளியலறையில் இருந்த கேமரா மூலம் லிங்க் செய்யப்பட்ட தனது செல்போனில் அவர் குளிப்பதை கண்டு ரசித்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுராஜா சொந்த ஊருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்து தனது செல்போனில் உள்ள குளியலறை காட்சிகளை காண்பித்து,தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால் நிர்வாணமாக குளிக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஆனாலும் அவரது இச்சைக்கு இணங்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மதுராஜா, அவரது குளியல் போட்டோக்களை நண்பர்கள் சிலரிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அந்த பெண் ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மதுராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.