குளச்சல் மார்ச் 29,
அடுத்த மாதம் 15-ம் தேதி வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவான நிலையில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு
வெயிலின் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழக அரசின் திட்டமான இலவசமாக குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் குளச்சல் உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் வைத்து இளநீர் மற்றும் ஜூஸ் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அதேபோல்
கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கன்னியாகுமரி உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கன்னியாகுமரியில் வைத்து தர்பூசணி மற்றும் மோர் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
காலை முதலே வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து போலீசாரின் கஷ்டங்களை நன்கு அறிந்து தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் குளிர்பானம் வழங்கும் நிகழ்வை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக குமரி மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு கிடைக்க செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு போலீசார் தங்களுடைய பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.