நாகர்கோவில் அக் 25
நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நாகர்கோவிலில் உள்ள சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானதா? அல்லது இருசக்கர வாகன வியாபாரிகளுக்கா? என்னும் சந்தேகம் எழுகிறது. நாகர்கோவில் சற்குணவீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் வாங்கவும், விற்கவும் ஏராளமான கடைகள் உள்ளன. இவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சாலையை ஆக்கிரமிப்பு செய்து, தங்களிடம் இருக்கும் இருசக்கர வாகனங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இவர்கள் வியாபார நோக்கத்தோடு வைத்திருக்கும் இந்த கடையால், சாலைகளில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதைக் காவல் துறையினர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் அவசரத் தேவைக்காக மருந்தகம் முன்பு காரையோ, இருசக்கர வாகனத்தையோ நிறுத்திவிட்டு அப்பாவி மக்கள் மருந்து வாங்கிவிட்டுத் திரும்புவதற்குள் அவர்களின் வண்டியை லாக் செய்வது, அபராதம் விதிப்பதும் தொடர்ந்து வருகிறது. சற்குணவீதி வியாபாரிகளுக்கு ஒரு நியாயம். அப்பாவி பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. சாலை ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு பத்து ரூபாய்க்கு தேநீர் குடிக்கச் சென்று, ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிய அப்பாவிகள் பலர், அபராதத் தொகையைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதேபோல் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் வழியிலும் பிரதான தேசிய நெடுஞ்சாலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக டூவீலர் விற்பனையகம் ஒன்று, சாலைப் பகுதியை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி கடைவிரித்துள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை அப்பாவி மக்களிடம் ஹெல்மெட் அபராதம் விதிப்பதில் மட்டுமே கண்ணும், கருத்துமாக உள்ளது. சாலை வசதிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து வரி பெறப்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் சாலைவரி என்றே பிரத்யேகமாகக் கட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் டூவீலர்களை விற்பனையாளர்கள் சாலையிலேயே நிறுத்திவைத்து போக்குவரத்திற்கு இடையூறுசெய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இன்றைய சூழலில் பொதுமக்களிடம் இருந்து ஹெல்மெட் அபராதம் விதித்துத்தான், காவல்துறைக்கே சம்பளம் கொடுக்கிறார்களா? என்னும் சந்தேகமும் எளிய மக்களுக்கு எழுந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை இவ்விசயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, மிக முக்கியமாக சற்குணவீதியில் பொதுமக்கள், வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திட வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.