வாணியம்பாடி:ஆக:29, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக அலுவலகம் புத்துக்கோவில் அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு
வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் (TBGPCCR) கீழ் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு நடுவதற்காக
பயனாளிகளுக்கு ஆலன், மகிழம், அத்தி, அரசன், நாவல், மகாகனி, பாதாம், புங்கன், வேம்பு, வேங்கை, நீர்மருது, ஈட்டி, வேங்கை, செம்மரம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தயாராக உள்ளதாக வனத்துறையினர் கூறினர்.
மேலும் அவர்கள் கூறுகையில் ” பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நாம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதில் இருந்து உயிரினங்களை காக்க வேண்டுமானால் அதிக அளவில் மரக்கன்றுகளை வனப் பகுதிகள் மட்டுமல்லாது மக்கள் வாழும் நிலப் பகுதிகளிலும் நட்டு வளர்க்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வளர்த்து பயனாளிகளுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வனத்துறை சார்பில் இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் பெற விரும்பும் பயனாளிகள் பட்டா அல்லது சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், போட்டோக்கள் எடுத்து வர வேண்டும். விளை நிலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும், வழிபாட்டுத் தலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும், கல்வி நிலையங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும் இங்கு உள்ளதாக கூறினர்.