தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு, வளர் இளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு,போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, காசநோய் விழிப்புணர்வு ,ரத்தம் மற்றும் உடலுறுப்பு தானம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இப்பேரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி நான்குரோடு வரை சென்று முடிவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி , இணை இயக்குனர் சாந்தி, மருத்துவர்கள், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி தாளாளர் மணிவண்ணன் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



