வேலூர் 25
வி.ஐ.டி பல்கலைகழகத்தின் ரிவேரா 2025 கலை விழா நிறைவு விழாவில் விளையாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக அணிக்கு நடிகர் சோனு சூட் பரிசு வழங்கினார்.
ரிவேரா கலைவிழா
காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா 2025 கலை மற்றும் விளையாட்டு திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடக்க விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது.
விழாவை இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை தொடங்கி வைத்தார். விழாவில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள 26 நாடுகளில் இருந்து 86 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகள், நாடகம், நாட்டியம் உள்பட 153 வகையான போட்டிகள் ரூ.5 கோடியே 50 லட்சத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஐக்கியா நடன நிகழ்ச்சி
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசார பண்பாட்டை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் ஐக்கியா கலை நிகழ்ச்சியும், சர்வதேச மாணவர்களின் கலாசார நடன நிகழ்ச்சிகளும், கலா என்ற பெயரில் பார்வையற்றற மாணவர்களுக்கான திறன் போட்டிகளும், தமிழி என்ற பெயரில் ராஜ்மோகன், எம்டி இசைக்குழுவின் தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், அகம் என்ற பெயரில் வைசாக்பாபுராஜ், நரேன்பிரசாத், அருண் குழுவினரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், ஜோனிடா காந்தி, டிஜே பரோமா, மஞ்சரி, மோகன் சகோதரிகள் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிங்ஸ்டன் படத்தின் டீசரை வெளியிட்டு தான் இசையமைத்த பாடல்களில் சிலவற்றைபாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
இதன் நிறைவு விழா நேற்று இரவு நடந்தது.
விழாவிற்கு துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சோனுசூட் கலந்து கொண்டு விளையாட்டு பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற வி.ஐ.டி பல்கலைக்கழக அணிக்கும், கலாசார பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணிக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்
அப்போது அவர் பேசியதாவது;
நானும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த மாணவர் தான். என்னுடைய தாயார் ஆங்கில பேராசிரியர்.
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் நான் கள்ளழகர் படத்தில் என்னுடைய முதல் படம் கள்ளழகர். நடிகர் விஜயகாந்துடன் இணைந்து நடித்தேன். தெலுங்கு சினிமா எனக்கு சினிமா என்ன என்பதை கற்றுத் தந்தது 13 மொழிகளில் நான் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். இப்போதும் திரைப்படத்தை பற்றி கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் நடிகராக போகிறேன் என என்னுடைய பெற்றோரிடம் கூறிய போது உனக்கு பிடித்ததை செய் என என்னை வாழ்த்தினார்கள். மாணவர்கள் படிக்கும்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் வருங்காலத்தில் நடிகர், இயக்குனர், அமைச்சர், பிரதமர் என பல்வேறு பொறுப்புகளில் வர முடியும். மும்பைக்கு வந்து திரைப்படங்களில் நடித்தது மூலம் லட்சியத்தை அடைந்து விட்டதாக நினைத்தேன். கொரோனா காலத்தில் நான் நடிகராக, என்ஜினீயராக இல்லாமல் மனிதநேயமிக்க மனிதனாக நடந்து கொண்டேன். கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு உதவி செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள். இப்பொழுதும் தினமும் 500 பேருக்கு உணவை வழங்கி வருகிறேன். உங்களை நீங்களே குறுக்கிக் கொள்ளாதீர்கள். நான் கல்லூரியில் நல்ல மாணவன்.
நான் இங்கு உங்கள் முன்னால் நிற்பதற்கு என்னுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம். என்னுடைய அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு உதவி செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மரக்கன்று நட்டு, மாணவ, மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
விழாவில்
துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளர் கோகுல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



