தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் மற்றும் போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்கள் ஒழித்தல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன் முன்னிலை வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல்,
விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளச்சாராயம் காய்சுப்பவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் பாதிப்புகள் குறித்தும், போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துக்கள் குறித்தும், விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் காவல் உதவி ஆணையர் நர்மதா, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கேசவன் மற்றும் தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.