புதுக்கடை , நவ- 24
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ம் தேதி இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி குதித்து, பிரதான கோவிலை உடைத்து கோவில் கருவறைக்குள் இருந்த மிகப் பழமையான 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், வெள்ளி அங்கிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது போன்று அதே நாளில் புதுக்கடை அருகே மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள 8 கிலோ எடையுள்ள உத்சவ மூர்த்தி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டுள்ளது. இந்த இரு கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதாக சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ், மற்றும் சஜீவ், அனி, ஜெலின் ராஜ் ஆகிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்தனர்.
இதற்கிடையில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில், இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டது தெரிந்தது. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில், பூதப்பாண்டியை சேர்ந்த மரியசிலுவை, மதுரையை சேர்ந்த பிரேம் , புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு நபர் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து முதலில் மரிய சிலுவையை பூதப்பாண்டியில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் பதுங்கி இந்த போது அவரை கைது செய்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, மதுரையை சேர்ந்த பிரேம் என்பவரிடம் சிலை இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் மதுரையில் உள்ள பிரேம் வீட்டில் வைத்து பார்த்திபபுரம், மங்காடு முருகன் கோவில்களில் திருடிய 2 ஐம்பொன் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால் பிரேம் தலைமறைவானார்.
இதையடுத்து இந்த சிலை கொள்ளை சம்மந்தமாக மரிய சிலுவை போலீசாரிடம் கூறுகையில் , – கடந்த 2010-ம் ஆண்டில் மரியசிலுவை ஒரு சிலை திருட்டு சம்மந்தமாக ஜெயிலில் இருந்த நேரம் மதுரை பிரேம் என்பவர் தொடர்பு கிடைத்துள்ளது. இதில் மதுரை பிரேம் பல சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர். அவர் மீது ஏராளம் சிலை கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு ரயில் யாத்திரையில் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் பிரேமுக்கும், மரிய சிலுவைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் கிடைத்த பழக்கத்தின் பேரில், புதுக்கடை நபரிடம், புதுக்கடை பகுதியில் உள்ள கோவில்களை பற்றி விசாரித்துள்ளனர். இதில் புதுக்கடை நபர் கொடுத்த தகவலின் பேரில் தான் பார்த்திபபுரம், மங்காடு கோவில்களில் திருடியதாக மரிய சிலுவை தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருடப்பட்ட 2 சிலைகள் மற்றும் மரிய சிலுவையுடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மரிய சிலுவையை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மாயமான மதுரை பிரேம், புதுக்கடை நபர் ஆகியோரை தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் எனவும், மேலும் பார்த்திபபுரம் கோவில் வெள்ளி முக கவசம், மற்றும் வெள்ளி அங்கிகள் போன்றவை இதுவரை கிடைக்காத நிலையில் அவை தொடர்பாக விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தலைமறைவானவர்கள் கிடைக்கும் போது இந்த வெள்ளி பொருட்கள் தொடர்பான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.