கொல்லங்கோடு, பிப்- 2
மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் கொல்லங்கோடு அருகே ஆனக்குழியில் உள்ள ஒரு பெந்தேகோஸ்து கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சபை வளாகத்தில் தங்கி உள்ளார். இவருக்கு அபிஜித் (14) என்ற மகனும் ஒரு மகளும் உண்டு.
அபிஜித் சூரிய கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது சபையில் கிறிஸ்மஸ் நேரத்தில் போட்ட சீரியல் லைட்டை நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அபிஜித் கழற்றி உள்ளார்.
அப்போது மாணவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவனை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அபிஜித் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.