போகலூர், நவ. 5 –
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர் ஒருவர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் தார் ரோடு போடுவதற்கு பணி பெற்றுள்ளார். இந்த பணி முடித்து அதற்குண்டான தொகையை விடுவிக்க வேண்டி கடந்த 24.10.2025 ஆம் தேதி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை பொறியியல் பிரிவு சீனியர் வரைவு அலுவலர் வீரசேகரனை நேரில் சந்தித்து செய்து முடித்த வேலைக்கான தொகையை விடுவிக்க கேட்ட போது, மேற்படி தொகையை விடுவிக்க துறை அலுவலர் வீரசேகரன் கமிஷனாக ரூ1,20,000/- கேட்டும், அதை துணை நிலை வரைவு அலுவலர் நாகலிங்கத்திடம் கொடுக்குமாறு கரராக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.1,20,000/-ஐ முதுநிலை வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம் மற்றும் உதவியாளர் அருண் ஆகியோரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


