மார்த்தாண்டம், ஏப்- 9
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி பகுதியான பூவன்கோடு செல்லும் சாலையில் மழை நீர் செல்வதற்காக 2021 – 22 ஆண்டில் காட்டாத்துறை ஊராட்சி மன்றம் ரூ 77 ஆயிரம் மதிப்பில் மழை நீர் ஓடை கட்டப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் மூலம் சென்று வந்தது
இந்த நிலையில் அந்தப் பகுதியில் தனியாரால் மழை நீர் ஓடை அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மழைநீர் அந்த பகுதியின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி, இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
ஊராட்சியால் கட்டப்பட்ட மழை நீர் ஓடைய கண்டுபிடித்து தருமாறும், தனியார் ஆக்கிரமித்து அடைத்து வைத்திருக்கும் ஓடையை மீட்க வலியுறுத்தியும் நேற்று 8-ம் தேதி காட்டாத்துறை ஊராட்சி அலுவலகம் முன்பு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மீட்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜஸ்டின் ஜஸ்டின் தேவகுமார், வடிகால் மீட்பு குழு தலைவர் ஜெகன் அல்போன்ஸ், வினோத், ஜோன்ஸ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.