பரமக்குடி, மே. 21:
தமிழக பாஜகவில் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரன் என கூறி தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியது மற்றும் ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட்டது போன்ற நிகழ்வுகளால் இந்த மக்களிடம் பாஜகவிற்கு ஆதரவுகள் பெரியது. ஆனால் தற்போது பொறுப்புகளில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால், மாநில பாஜகவிற்கு நேரடியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு மற்றும் முக்கிய பொறுப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்களை சேர விடாமல் தடுப்பது யார்?, யார் அந்த சார்? தவறை திருத்திக் கொள்ளுமா தமிழக பாஜக என வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தின் மேல் 2026 கேள்விக்குறி என்ற படமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. தமிழக பாஜகவில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பொறுப்புகள் கொடுக்க விடாமல் தடுப்பது குறித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட விளக்கம்
பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் பாஜகவில் பொறுப்பு கூடாததை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்