பரமக்குடி, ஜூன் 28 –
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன் குமார் இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்டுமான மத்திய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா மத்திய சங்க மாவட்ட தலைவர் நாகசாமி முன்னிலை வகித்தார். கொளுவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயசூரியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு 60 வயது முடிந்தால் 1200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் உள்ள நடைமுறைகளை தளர்த்தி எளிமைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுச் செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெகதீசன், குரு நாகலிங்கம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



