ஈரோடு, ஜன. 7 –
தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில்
மொத்தம் 1,270 கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 746,528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளார்கள்.
இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் வருகிற 8 ந் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அப்போது ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொது மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்கப்படுவதையொட்டி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மாவட்டம் கோபி, கூகலூர் பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கரும்பின் சுவை, உயரம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பொலவக்காளிபாளையம் மற்றும் வெள்ளாளபாளையம் பகுதியில் குடும்ப அட்டைதார்களுக்கு நியாயவிலைக்கடைகள் விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டு தேதி, நேரம், இருப்பதை ஆய்வு செய்தார்.
மேலும் கோபி, லக்கம்பட்டி, கரட்டடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடைகளில் பொங்கலுக்கு கொள்முதல் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, ஆகியவற்றின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



