நாகர்கோவில், டிச. 11 –
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார் ஆய்வாளர்கள் (எஸ் ஐ ) தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 பணிக்காலியிடங்களுமென மொத்தம் 1299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21.12.2025 காவல் சார் ஆய்வாளர்கள் தேர்வானது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் 16.12.2025 செவ்வாய்க்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து இலவச மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த மாதிரி தேர்வானது காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மாணவர்கள் அனைவரும் 9.30 மணிக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை தேர்வு நாளன்று கொண்டுவருமாறு, மேலும் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பகிரப்பட்டுள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தை பிழையின்றி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.


