நாகர்கோவில் ஜூன் 29
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார் . எனவே மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும் தலைக்கவசம் அணியாமல் , அதிக ஒலி எழுப்பி இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்டரின் மற்றும் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் மீனாட்சிபுரம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு
வந்தனர்.அப்போது ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி தணிக்கை மேற்கொண்டபோது அவர்கள்
வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது. மேலும் அந்த வாகனங்களில் பதிவு எண் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது போன்ற விதி மீறலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அபராதம் விதித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.