மதுரை பிப்ரவரி 23,
மதுரை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விவசாயிகள் எளிதில் பெற செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் தரவுகள் பதிவு செய்யும் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் தரவுகள் பதிவு செய்திட வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, மதுரை மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, நில உடைமை பட்டா. ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை எடுத்து சென்று அவர்களிடம் பதிவு செய்து கொண்டு அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்துத்துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அரசு நல திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதையும் இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் தாமதமின்றி தங்கள் கிராமத்திற்கு வரும் அலுவலர்களிடம் தாங்கள் குறித்த நில விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 586 வருவாய் கிராமங்களில் 24,123 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த 142,718 விவசாயிகள் அனைவருக்கும் நில உடைமை தரவுகள் பதிவேற்றம் செய்து அடையாள எண் வழங்கிட தொடர்ந்து முகாம்கள் நடைபெறும். எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் நில விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி மதுரை மேற்கு வட்டார உதவி இயக்குநர் (பொ) பானுமதி, வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கிராம அளவிலான சமுதாய வன பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மதுரை.



