நாகர்கோவில் பிப் 26
குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு:- பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்த மிக பயனுள்ள திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250-ம் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டக் கணக்கிற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C இன் படி ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி நோக்கங்களுக்காக கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. 18 வயது நிரம்பிய பின் (திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குப் பின்) திருமணத்தின்போது கணக்கை முடித்துக் கொள்ளவும் வழி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 10ம் தேதி வரை அனைத்து அலுவலகங்களிலும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து தங்கள் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டமானது, பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே, ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே, ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே
ஆகவே அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை தொடங்கி உங்கள் செல்ல மகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை கொடுத்திடுங்கள் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.செந்தில் குமார் அறிவித்துள்ளார்.