நாகர்கோவில் ஏப் 13
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மக்கள் நல நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி எனும் இத்திட்டத்தினை சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுவிளை கிராமத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்திற்கு இந்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட காவலர் ராஜகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உடன் இருந்தார்.
ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்:
இத்திட்டத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒரு காவலர் நியமிக்கப்படுவார். இவற்றில் தாய் 97 கிராமங்களும் 1164 குக்கிராமங்களும் உள்ளன. இவற்றை 761 துணை ரோந்துகளாக பிரித்து, ஒவ்வொரு ரோந்திற்கும் தலா 1 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முயற்சியின் கீழ், காவல்துறையினர் வாரத்திற்கு மூன்று முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று சமூக நிகழ்வுகளை நடத்தவும், தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள கிராம மக்களுடன் நட்புறவுகளை ஏற்படுத்துதல் வேண்டும். இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 761 காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க காவல் 55 உதவி ஆய்வாளர்களும், 21 காவல் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திட்டத்தின் நோக்கம்:
பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல்,
பொதுமக்களுக்கு தேவையான காவல் பணி செய்தல், பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்துதல்,
ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக காவலர்களை நியமித்து பொறுப்புகளை வழங்குவதன் மூலம் காவலருக்கு அதிகாரம் அளித்தல்,
அனைத்து காவலர்களுக்கும் பணியினை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் பணி சுமையை குறைத்து காவல் பணியை மேம்படுத்துதல்,
நியமிக்கப்பட்ட காவலர்கள் கிராமங்களில் பொதுமக்களுடன் இணைந்து சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
நியமிக்கப்பட்ட காவலரின் பணிகள்:
வாரத்திற்கு மூன்று முறை தான் நியமிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும்,
காவல்துறையின் முன்னெடுப்புகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல், நீதித்துறை மற்றும் காவல் நிலையத்தின் அழைப்பானைகளை (Summons) வழங்குதல்,
நீதிமன்ற பிடியாணையை (NBW) நிறைவேற்றுதல்,
அரசு தனியார் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் நன்னடத்தையே சரிபார்த்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தல்,
வங்கிகள், நகைக்கடைகள், வெளியூர் சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகள், வழிபாடு தளங்கள், மதுபான கூடங்கள் மற்றும் இரவு நேர உணவகங்களை கண்காணித்தல்,
சைபர்கிரைம், போக்குவரத்து விதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்துதல்,
குமரி மாவட்ட அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி:
இந்த ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற நிலையை கன்னியாகுமரி மாவட்டம் அடையும். அதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் இது பலனளிக்கும்.